
அகரமுதல எழுத்தெல்லாம் ஆன தெய்வமே
ஆறுமுக வேலவனாய் அமர்ந்த தெய்வமே!
அம்மையப்பன் மகனான அழகுத் தெய்வமே
ஆறுமுகம் கொண்டெமக்கு அருளும் தெய்வமே
இம்மையிலும் மறுமையிலும் இணையும் தெய்வமே
ஈசனாரின் நெற்றிக் கண்ணில் எழுந்த தெய்வமே
உண்மைதனை உருவாகக் கொண்ட தெய்வமே
ஊருலகை வாழவைக்கும் உயர்ந்த தெய்வமே
எண்ணமெல்லாம் நீயானாய் இதயத் தெய்வமே
ஏறுமயில் ஏறிவரும் உதயத் தெய்வமே
ஐங்கரனின் சோதரனாம் அருமைத் தெய்வமே
ஐயமெல்லாம் நீக்கிஎமை ஆளும் தெய்வமே
ஒன்றாகிப் பலவாகி ஒளிரும் தெய்வமே
ஓங்காரத் தத்துவத்தை உணர்த்தும் தெய்வமே
ஒளவைமொழி கேட்டு மனம் மகிழும் தெய்வமே
ஒளடதமாய் வினையறுக்கும் அமுதத் தெய்வமே!
- இந்துமகேஷ்
(26.03.2004)