Monday, February 19, 2007
குருவாய் நீ வந்தருள் செய்தால்...
கந்தனின் நாமமே கருணை என்றாகும்
கந்தனின் நாமமே கவலைகள் போக்கும்
கந்தனின் நாமமே இன்பம் என்றாகும்
கந்தனின் நாமமே இன்னல்கள் போக்கும்
கந்தனின் நாமமே உலகம்என்றாகும்
கந்தனின் நாமமே உன்னுயிர் காக்கும்
ஒரு நாமம் அறிந்தேன்ஓம் ஓம்
ஓம் என்று உனைநான் பணிந்தேன்
முருகா உன் திருமுகம் கண்டேன்
முக்திக்கொரு வழியினைக் கண்டேன்
திருவாயில்சிந்திடும் புன்னகை
தீவினைகள் எரித்தெனைக் காக்கும்
குருவாய் நீ வந்தருள் செய்தால்
அருள்ஞானம் எனக்குள் பூக்கும்
கருவாய் நான் உயிர்கொண்டபோதே
கந்தா நீ என்னுடன் இருந்தாய்
உருவாய் நான் உலகினைக்கண்டேன்
உலகெங்கும் நீயெனக் கண்டேன்
அருள்வாய்நீ என்றுன்னைத் தொழுதால்
அல்லல்கள் விட்டெமை நீங்கும்
பெருவாழ்வைத் தருபவன்நீயே
பேரின்பப் பெரும்பொருள் நீயே!
-இந்துமகேஷ்
27.06.2004
Thursday, February 01, 2007
உனக்காகப் பாடுகிறேன்
ஓம் முருகா என்றுருகி
உனக்காகப் பாடுகிறேன்
உன்னடியைக் காண்பதற்கே
உயிர்சுமந்து வாடுகிறேன்
கண்ணிரண்டும் பெற்ற பலன்
கந்தன் முகம் கண்டது - நான்
காதிரண்டும் பெற்ற பலன்
கந்தன் புகழ் கேட்டது
கையிரண்டும் பெற்றபலன்
கந்தனுக்காய் குவிந்தது நான்
காலிரண்டும் பெற்ற பலன்
கந்தனிடம் சென்றது
வாயினாலே பெற்றபலன்
கந்தன் பெயர் சொன்னது - நான்
வாழுகின்ற மூச்சின் பலன்
கந்தனுக்காய் உயிர்த்தது
சிரத்தினாலே பெற்ற பலன்
கந்தனுக்காய் பணிந்தது - நான்
சிந்தையாலே பெற்ற பலன்
கந்தனையே நினைத்தது
மேனியாலே பெற்ற பலன்
கந்தன் தொண்டு ஆனது - நான்
மேதினியில் பிறந்த பலன்
கந்தனாலே நிறைந்தது.
-இந்துமகேஷ்
02.07.2004
Subscribe to:
Posts (Atom)
என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.
என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...
-
நீராடும் கண்களிலே நிழலாடும் தாய்மடியை நினைவூட்ட வந்த அழகே! நிலைமாறும் வாழ்வினிலே நிலையாக நின்னருளை நித்தமும் பொழியும் மழையே! சீரோ...
-
துதிபாடித் துதிபாடித் துணை தேடினேன் துதிக்கையான் திருக்கோயில் தனை நாடினேன் -இந்துமகேஷ் துதிபாடித் துதிபாடித் துணை தேடினேன் துதிக்கையான் திர...
-
பிரியாத வரம் ஒன்று கேட்டேன் புரியாத வாழ்வுக்குப் பொருளான குமரா - உன்னைப் பிரியாத வரம் ஒன்று கேட்டேன். இருள் மாய வினை நீக்கி அருள் ஞான ஒளிய...