Thursday, February 13, 2014

உன்னதத் திருநாள் போற்றி!



அருளமுது ஊட்டியெமை ஆதரிக்கும் அன்னையவள்
அடிக்கமலம் போற்றி போற்றி
ஆனந்தத் தாண்டவனின் சரி பாதியாய் அமர்ந்த
அருள்வடிவே போற்றி போற்றி
இருள்மாயை சூழ்கின்ற இன்னலினை ஓட்டியெமை
இரட்சிப்பாய் போற்றி போற்றி
ஏழேழு பிறவியிலும் எங்கள் துணையாகவரும்
எழிலுருவே போற்றி போற்றி

நிலம் பெயர்ந்து வந்தவரை நிழலாகத் தொடர்கின்ற
நித்தியமே போற்றி போற்றி
ஜெர்மனியின் ஹம்நகரில் நிலையாகக் குடிகொண்ட
ஜெகன்மாதா போற்றி போற்றி
பலமிழந்து நின்றோர்க்கும் பாஸ்கரர் தம் வழியாக
பக்தியினைத் தந்தாய் போற்றி
பாரெங்கும் தமிழரினம் சீர்பெற்று வாழ்ந்திடவே
பதமருள்வாய் போற்றி போற்றி

காமாட்சி பேர்கொண்டு கதியாகி நின்றெமக்கு 
கருணையினைத் தந்தாய் போற்றி
கண்கொண்ட பேறதனை காணவருள் செய்திட்ட
கற்பகமே போற்றி போற்றி
நாமாட்சி செய்கின்ற நல்லதமிழ் ஈழமதும்
நலியாது காப்பாய் போற்றி
நானிலத்தோர் உன்பேரை நாள்தோறும் உச்சரிக்கும்
நலமருள்வாய் போற்றி போற்றி

தலமான ஒருவீடு தனதாகத் தான் கொண்ட
சத்தியமே போற்றி போற்றி
சர்வாலங் காரியெனத் தேரூர்ந்து களிப்பூட்டும்
தரிசனமே போற்றி போற்றி
உலகாளப் பலநூறு வடிவங்கள் எடுத்தெங்கள்
உளமாளும் தாயே போற்றி
உனக்கான திருக்கோயில் உவந்தின்று குடிகொள்ளும்
உன்னதத் திருநாள் போற்றி

-அடியவன்
இந்துமகேஷ்


(ஹிந்து சங்கரர் சிறி காமாட்சி அம்பாள் ஆலயம்
மகா கும்பாபிஷேகம் மலர் 2002இல் பிரசுரமானது)




என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...