Friday, October 05, 2007

நெஞ்சமெல்லாம் நீயாக...





நெஞ்சமெல்லாம் நீயாக
நிம்மதியைத் தேடினேன்
தஞ்சமென்று தாள் பணிந்து
சந்நிதியை நாடினேன்


உன்னைத்தேடி அலையும் எந்தன்
உள்ளம் அறிய வில்லையோ
உணர்ந்துகொண்டும் அருள்வழங்கும்
எண்ணம் உனக்கு இல்லையோ?

என்னைவிட்டு நீ பிரிந்தால்
எங்குசெல்வேன் கந்தையா - என்
இதயக்கோயில் திறந்துவைத்தேன்
எழுந்தருள்வாய் வேலய்யா!

நெஞ்சமெல்லாம் நீயாக
நிம்மதியைத் தேடினேன்
தஞ்சமென்று தாள் பணிந்து
சந்நிதியை நாடினேன்!


மாடி மனை கோடிசெல்வம்
வரங்கள் கேட்டதில்லையே - என்
வாழ்வைக் காக்க வேண்டுமென்றும்
வந்துநின்ற தில்லையே

கூடிவந்த வினையறுக்க
குமரன் உன்னைத் தேடினேன் - நீ
குன்றில் ஏறி நின்று கொண்டாய்
நிலைதளர்ந்து வாடினேன்

நெஞ்சமெல்லாம் நீயாக
நிம்மதியைத் தேடினேன்
தஞ்சமென்று தாள் பணிந்து
சந்நிதியை நாடினேன்

ஆவதெல்லாம் கந்தனாலே
அடியவர்கள் சொல்கிறார் - உன்
அருள்வழங்கும் விழிகளாலே
துயர்கள் யாவும் வெல்கிறார்

நெஞ்சமெல்லாம் நீயாக
நிம்மதியைத் தேடினேன்
தஞ்சமென்று தாள் பணிந்து
சந்நிதியை நாடினேன்

தேவர் துயர் தீர்த்து வைத்து
சிரித்துநின்றாய் வேலவா -என்
சிந்தையிலே உனைப்பதித்தேன்
சீக்கிரமாய் ஆளவா!

நெஞ்சமெல்லாம் நீயாக
நிம்மதியைத் தேடினேன்
தஞ்சமென்று தாள்பணிந்து
சந்நிதியை நாடினேன்

அஞ்சுதல் ஏன் என்றுரைத்து
அபயமதைத் தந்தவா
ஆறுமுகம் ஓர் முகமாய்
அருள்பொழியும் வேலவா!

நெஞ்சமெல்லாம் நீயாக
நிம்மதியைத் தேடினேன்
தஞ்சமென்று தாள் பணிந்து
சந்நிதியை நாடினேன்!


-இந்துமகேஷ்
10.09.2004 பகல்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...