Tuesday, May 30, 2006

அரகர முருகா! எனை யாளும் சண்முகா!





அரகர முருகா
எனை யாளும் சண்முகா!


அரகர சிவ சிவ சண்முக நாதா
ஆண்டருள் செய்திட அருகினில் வாவா!

இருவினை களைந்திடும் என்குரு நாதா
ஈடிலா நின்பதம் பெற அருள் தாதா!

அரகர முருகா
எனை யாளும் சண்முகா!

உலகினைக் காத்திடும் உயர்கும ரேசா
ஊழியம் புரிந்திடும் அடியவர் நேசா!

எளியவர்க் கிரங்கிடும் என்குரு நாதா
ஏழையென் பால் உந்தன் மனமிளகாதா?

அரகர முருகா
எனை யாளும் சண்முகா!

ஐங்கரன் தம்பியே அருள்வடி வேலா!
ஐயமில் லாதொரு வாழ்வினைத் தாதா!

ஒருமுக மாகிய அறுமுக வேலா
ஓய்ந்திடு முன்எனைக் காத்திட வாவா!

அரகர முருகா
எனை யாளும் சண்முகா!

ஒளவைக்கு ஞானத்தை வழங்கிய பாலா
அருள்விழி காட்டிஎன் துயரகற் றாயா!

அரகர சிவசிவ சண்முக நாதா!
ஆண்டருள் செய்திட அருகினில் வாவா!

அரகர முருகா
எனை யாளும் சண்முகா!


-இந்துமகேஷ் 2004

(பிறேமனில் கோயில்கொண்ட அருள்மிகு சிவசக்திக்குமரனை நினைந்து எழுதிய பஜனைப் பாடல்)

Wednesday, May 17, 2006

வருவாய்! துணைபுரிவாய்!

முருகா! மால் மருகா!
வருவாய் துணைபுரிவாய்!


வேலெடுத்து சூரர்படை
வேரறுத்த வேலவா!
நாடுகாக்கப் போர்தொடுத்த
நமது சுற்றம் காக்கவா!

காடலைந்து வள்ளிதன்னைக்
கரம்பிடித்த வேலவா!
நாடலைந்தும் உன்னில் நாங்கள்
கொண்டகாதல் காணவா!

வேலெடுத்து சூரர்படை
வேரறுத்த வேலவா!
நாடுகாக்கப் போர்தொடுத்த
நமது சுற்றம் காக்கவா!

ஓமுரைத்த பொருள் வகுத்து
தந்தைமனம் ஈர்த்தவா!
நாம்அழைக்கும் நிலையறிந்து
நன்மைகளைச் சேர்க்கவா!

வேலெடுத்து சூரர்படை
வேரறுத்த வேலவா!
நாடுகாக்கப் போர்தொடுத்த
நமது சுற்றம் காக்கவா!

நீபடைத்த மண்ணில் என்றும்
நிறைந்திருக்கும் வேலவா!
போர்முடித்து சுதந்திரத்தைப்
போற்றுகின்ற வாழ்வு தா!

வேலெடுத்து சூரர்படை
வேரறுத்த வேலவா!
நாடுகாக்கப் போர்தொடுத்த
நமது சுற்றம் காக்கவா!

ஆறுபடை வீடமைத்து
அருள்புரியும் வேலவா
தேறுதலைத் தேடும் எங்கள்
தீவினைகள் போக்கவா!

வேலெடுத்து சூரர்படை
வேரறுத்த வேலவா!
நாடுகாக்கப் போர்தொடுத்த
நமது சுற்றம் காக்கவா!


(இந்துமகேஷ் - 1992 ஆடி)

Monday, May 08, 2006

கந்தனை நினைந்து...



காலமெல்லாம் உந்தன் புகழ்பாட
கருணை புரிவாய் கதிர்காமா!
ஞாலம் படைத்துக் காப்பவனே
நல்லோர்க் கருளும் நல்லூரானே!

சந்ததம் உன்னைச்
சிந்தையில் வைத்தால்
தருவாய் சுகமே
சந்நிதியானே -செல்வச்
சந்நிதியானே

வந்தமர் குன்றம்
வளமிகு சோலை
வாழ்திருத் தணிகை
நின்றிடுவோனே - இன்பம்
தந்திடுவோனே

காலமெல்லாம் உந்தன் புகழ்பாட
கருணை புரிவாய் கதிர்காமா!

கல்மனம் கொண்ட
புல்லரும் உந்தன்
கழலே தொழுதே
கனிந்திடுவாரே - துன்பம்
களைந்திடுவாரே

எல்லையே இல்லா
அன்பினால் என்றும்
இன்னருள் புரியும்
மால்மருகோனே - திரு
மால்மருகோனே

காலமெல்லாம் உந்தன் புகழ்பாட
கருணை புரிவாய் கதிர்காமா!


(இந்துமகேஷ் -1992கார்த்திகை)

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...