Monday, May 08, 2006

கந்தனை நினைந்து...



காலமெல்லாம் உந்தன் புகழ்பாட
கருணை புரிவாய் கதிர்காமா!
ஞாலம் படைத்துக் காப்பவனே
நல்லோர்க் கருளும் நல்லூரானே!

சந்ததம் உன்னைச்
சிந்தையில் வைத்தால்
தருவாய் சுகமே
சந்நிதியானே -செல்வச்
சந்நிதியானே

வந்தமர் குன்றம்
வளமிகு சோலை
வாழ்திருத் தணிகை
நின்றிடுவோனே - இன்பம்
தந்திடுவோனே

காலமெல்லாம் உந்தன் புகழ்பாட
கருணை புரிவாய் கதிர்காமா!

கல்மனம் கொண்ட
புல்லரும் உந்தன்
கழலே தொழுதே
கனிந்திடுவாரே - துன்பம்
களைந்திடுவாரே

எல்லையே இல்லா
அன்பினால் என்றும்
இன்னருள் புரியும்
மால்மருகோனே - திரு
மால்மருகோனே

காலமெல்லாம் உந்தன் புகழ்பாட
கருணை புரிவாய் கதிர்காமா!


(இந்துமகேஷ் -1992கார்த்திகை)

No comments:

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...