Tuesday, August 13, 2013

போற்றுகிறோம் தருக துணையே!






நீராடும் கண்களிலே நிழலாடும் தாய்மடியை
நினைவூட்ட வந்த அழகே!
நிலைமாறும் வாழ்வினிலே நிலையாக நின்னருளை
நித்தமும் பொழியும் மழையே!
சீரோடு வாழ்ந்தவர்கள் தெருவோடு வந்தாலும்
தீமைகளில் காக்கும் உமையே!
செய்வினைகள் வேரறுக்க தேரேறி வந்தருள்வாய்
ஸ்ரீ இராஜ ராஜேஸ் வரியே!

பாரோடு விண்ணாளும் பரமனவன் துணையாகி
பல்லுயிரும் படைத்த ஒளியே!
பக்திக்குள் ஆழ்ந்தமனம் முக்திக்குள் வீழ்வதற்கு
பாதையினைத் தந்த உயிரே!
போராடும் வாழ்வுக்குள் புதையுண்டு போகாமல்
புதுப்பாதை காட்டும் அருளே!
பூவுலகில் மாந்தரெலாம் ஓருறவாய் நின்றுன்னைப்
போற்றுகிறோம் தருக துணையே!

-இந்துமகேஷ்.


/பிரசுரம்: சிவத்தமிழ்)


Thursday, June 20, 2013

சாந்திபெற நீயருள்வாய்!


















நாம் வேண்டும் நன்மையெல்லாம்
நமக்கள்ளித் தந்திடத்தான்
நாகபூஷணி அம்மா - நம்மருகே  வந்தமர்ந்தாள்!


தந்திடத்தான் தாயே வந்துவிட்டாய்!
வந்துவிட்டாய் -வரங்கள் தந்திடத்தான்!


       ஐந்து தலை நாகமொன்று வந்துகுடை பிடிக்கும்
       அம்பிகை உன் பாதம் தொட்டால் எங்கள் துயர் பறக்கும்
       சிந்தையிலே உன்னை வைத்து செய்யும் பணி சிறக்கும்
       தேவி உந்தன் பார்வைபட்டால் செல்வமெல்லாம் செழிக்கும்


தந்திடத்தான் தாயே வந்துவிட்டாய்!
வந்துவிட்டாய் வரங்கள் தந்திடத்தான்!


        சங்கரி உன் பூமுகத்தில் என்றும் அருள் சுரக்கும்
        சந்ததமும் உன்னருளால் சாந்தி இங்கே தழைக்கும்
        மங்களங்கள் பொங்கிவந்து வாழ்வுதனை நிறைக்கும்
        வையகத்தில் உன்னையன்றி இன்பமில்லை எவர்க்கும்.

தந்திடத்தான் தாயே வந்துவிட்டாய்!
வந்துவிட்டாய் வரங்கள் தந்திடத்தான்!


       எங்கள் துணை நீயிருக்க ஏதுமில்லை கலக்கம்
       இன்னருளைத் தந்திடம்மா வாழும் எல்லா உயிர்க்கும்
       தங்கமுகம் பார்த்திருப்போம் காலம் உள்ள வரைக்கும்!
       சாந்திபெற நீயருள்வாய் எங்கும் ஒளி பிறக்கும்!

தந்திடத்தான் தாயே வந்துவிட்டாய்!
வந்துவிட்டாய் வரங்கள் தந்திடத்தான்!


-இந்துமகேஷ் (2008)


என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...