
ஒருநாள் இருநாள்
உளதா வாழ்வு?
உனதாய் உயிராய்
நிறைந்த தென் வாழ்வு!
கருவாய் மிதந்தேன்
உருவாய் தவழ்ந்தேன்
கழலே நினைந்து
தவமே புரிந்தேன்!
அழகா! குமரா!
முருகா! எனநான்
அழைத்தேன்! அணைத்தாய்!
அகம்நான் மகிழ்ந்தேன்!
உலகே பெரிதாய்
உறவே நிலையாய்
உணர்ந்தேன் உனைநான்
பிரிந்தேன்! அலைந்தேன்!
அலைமேல் துரும்பாய்
அறியா மாயைக்
கடலில் விழுந்தேன்!
எனைநான் தொலைத்தேன்!
வருவாய் முருகா!
அருள்வாய் என நான்
தவித்தேன்! அணைத்தாய்
விழிநீர் துடைத்தாய்!
உனையே நினைந்தே
உருகும் சுகமே
நிலையாய் அடைந்தேன்!
நினையே தொடர்ந்தேன்!
உயிரின் உயிரே!
உறவின் பொருளே!
அருளின் மகனே!
நீயென் துணையே!
புகழும் பொருளும்
புவியின் சுகமும்
நிலையா தறிந்தேன்!
நினையே தொடர்ந்தேன்!
இகம்நீ! பரம்நீ!
எனதா ருயிர்நீ!
எழுவாய்! உலகின்
துயர்நீ களைவாய்!
அழகா! குமரா!
முருகா! அருள்வாய்!
அழகா! குமரா!
முருகா! அருள்வாய்!
அழகா! குமரா!
முருகா! அருள்வாய்!
-இந்துமகேஷ்
(25.05.08)
No comments:
Post a Comment