
காணிக்கை தர எந்தன் கண்ணீரே போதாதா?
கந்தா உன் மனமிரங்கி கருணை செய்தால் ஆகாதா?
ஏதுக்கோ வாழ்வென்று இதுவரையில் புரியவில்லை
இன்றுன்னை நானறிந்தேன் இனி எனக்கோர் துயரில்லை
வீணுக்காய் நானலைந்து வீழ்ந்த கதை போதுமையா
வேலவனே உன்னால் நான் மீண்டும் எழ வேண்டுமையா!
வானகத்துத் தேவருக்கும் வதைசெய்த சூரருக்கும்
நீயளித்த கருணையது நெஞ்சமதை உருக்குதையா
கானகத்து வள்ளிக்கும் கரம்கொடுத்த மணவாளா
காதலினால் உருகுகிறேன் கண்டுமனம் இளகாதா
சிவசக்திக்குமரா உன் திருவடியைப் பற்றுகிறேன்
தினந்தோறும் உன்பெயரே உச்சரித்துக் கரைகின்றேன்
தவக்கோலம் கொள்ளாமல் சன்னதிக்கு வருகின்றேன்
சஞ்சலங்கள் தீர்த்தெமக்கு சாந்தி தர மாட்டாயா!
-இந்துமகேஷ்
(16.03.2004)
No comments:
Post a Comment