
அன்னை உமை பாலகனே! ஆறுமுக வேலவனே
உன்னை எண்ணித் துதித்திருந்தேன்
ஓடிவந்து அணைப்பதெப்போ?
( இறவாமல் பிறவாமல் எனையாள்சற் குருவாகிப்
பிறவாகித் திறமான பெருவாழ்வைத் தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசற் குமரேசா
கறையானைக் கிளையோனே கதிர்காமப் பெருமாளே!- திருப்புகழ்)
பாடிவைத்தான் அருணகிரி பக்தியோடு திருப்புகழை
நாடிவந்து அருள்கொடுத்தாய்! நானழைத்தால் வாராயோ?
தேடியுன்னைச் சரணடைந்தால் தீமைகளை வேரறுப்பாய்
வாடிமனம் சோருமுன்னே வந்தருள மாட்டாயோ!
அண்ணனுக்குப் பழம்கொடுத்த அப்பனம்மை தனைப்பிரிந்து
வண்ணமயில் மீதமர்ந்து வந்து நின்றாய் பழனியிலே!
மண்ணுலகில் நான்பிறந்து வாழுகின்றேன் உனக்காக
எந்தனுக்கோர் ஞானப்பழம் என்று வந்து நீ தருவாய்!
ஆறுமுகம் ஓருருவாய் அப்பனே நான் உனையறிந்தேன்
வேறுதுணை ஏதுமில்லை வீழ்ந்து விட்டேன் உன்னடியில்
ஆறுபடை வீடமர்ந்து ஆட்சிசெய்யும் நாயகனே
தேறுதலை நீ தருவாய்! ஆறுதலை நான் தொழுவேன்!
- இந்துமகேஷ்
(15.03.2004 நள்ளிரவு)
No comments:
Post a Comment