Tuesday, January 08, 2008

ஓம்முருகா ஓம்முருகா என்றவனை நாடு!










தித்திக்கும் தமிழ்கொண்டு பாமாலை சூடி
திருவடியில் தலைவைத்து முருகா என்றாடி
பக்திக்குள் மூழ்குமனம் பல்லாண்டு பாடி
பணிந்தாலே திருக்குமரன் வருவானே ஓடி


இரவுபகல் பாராது எப்போதும் பாடு
இன்னருளைத் தருமுருகன் அருள்வடிவைத் தேடு
உறவெனவே அவன் வருவான் உள்ளன்பினோடு
ஓம்முருகா ஓம்முருகா என்றவனை நாடு


மாங்கனியில் ஞானமதை வைத்த முருகேசன்
வள்ளிமனங் கவர்ந்தருளும் அன்பர்களின் தாசன்
ஓங்கிவளர் சூரர்தமை ஒடுக்கியருள் ஈசன்
உள்ளன்பு கொண்டவர்க்குள் உறைகின்ற வாசன்


வீணான காலங்கள் போக்கியது போதும்
வேலவனின் திருவடியே சரணமென ஓதும்
குணமென்னும் குன்றேறி நின்றாலே நாளும்
குமரனவன் அருளொன்றே காத்தெம்மை ஆளும்


ஆறுபடை நூறுபடை ஆனதிந்தக் காலம்
ஆறுமுகன் நின்றருளக் காட்டும் திருக்கோலம்
நீறுபடை நெற்றியொடு கண்டுகளித் தாடும்
நெஞ்சுடையோர் தம்மாலே நிறைந்ததுவே ஞாலம்.


-இந்துமகேஷ்
(01.12.2004)

No comments:

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...