
முருகா முருகா முருகா என்று
முப்பொழுதும் அழைக்கின்றேன்
வருவாய் முருகா அருள்வாய் என்று
வாழும் நாளைக் கழிக்கின்றேன்
திருமால் மருகா குமரா என்றுன்
சேவடியைத் துதிக்கின்றேன்
சிந்தைக் கினியோய் அருள்வாய் என்று
தினமும் வழியைப் பார்க்கின்றேன்
அருவாய் உருவாய் தெரிவாய் உனையே
அனுதினமும் நினைக்கின்றேன்
திருவாய் மலரும் சிரிப்பின் அழகில்
தினமும் என்னை மறக்கின்றேன்
கருவாய் உருவாய் ஆனேன் எனையே
காலடியில் தருகின்றேன்
குருவாய் வருவாய் அருள்வாய்என்று
குவலயத்தில் அலைகின்றேன்
சருகாய் புவியில் சரியும் முன்னே
சரவணனைப் பணிகின்றேன்
தருவாய் நலமே தவமே என்று
சந்நிதியில் புரள்கின்றேன்.
-இந்துமகேஷ்
(13.05.2004)